கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-17)

 

காதலின்போது ஊடல், கல்யாணத்துக்குப்பின் மோதல் என்பது சிவா-பார்வதி காலம் தொடங்கி சிவாஜி-பத்மினி காலத்தில் தொடர்ந்து சிம்பு-சிம்ரன் வரை நடக்கும் ஆண்-பெண்  உறவின் எதார்த்தம். ஏதோ ஒரு ரைமிங் ஆக இருக்கட்டுமே என்று அடிச்சு விட்டேன். அதனால இந்த ஜோடிகளுக்குள் தகராறு என்று சிண்டு-கிண்டு  முடிந்து விடாதீர்கள். படத்தில் பாட்டு வர்ற டைமிங் சரியில்லை என்றால் கூட ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ரைமிங்  சரியாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத (எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்) இலக்கணம் ஒன்று சினிமா துறையில் உள்ளது. உதாரணத்துக்கு, முதல் வரி 'ஆவணி'யில் முடிந்தால், அடுத்து வருவது 'தாவணி'-யாகத்தான்  இருக்க வேண்டும் என்பது யாரும் மீரக்கூடாத தமிழ் சினிமா விதி (நம் தலைவிதி!). ஆனால். கண்ணதாசன் மாறாக  'மாங்கனி' என்று எழுதினார். மச்சான் 'மீசை' என்றால், அப்புறம் மச்சினி 'ஆசை'யைப் போட்டுக்கலாம். இப்போ 'தோசை' என்று சொல்லிக்கூட சமாளித்து விடுவார்கள். முதல் வரியில் 'மங்கை' என்றால் அடுத்த வரியில் கட்டாயம் 'கங்கை' ஒடித்தானாக வேண்டும். முதல் வரியில் 'வருஷம்' பின்னாடி 'புருஷன்'-உம் வருவார். 'பரிசம்' கூட ஓகே, செட் ஆகும். ஆனால் 'கமிஷன்' என்று வந்துவிடக்கூடாது! அதுவே மாப்பிளைக்கு 'வீராப்பு' என்றால், கண்டிப்பாக அடுத்த வரி முடிவுதான் உங்களுக்குத் தெரியுமே... வேறென்ன? 'மாராப்பு'தான்! நேயர்கள் அவர்கள் சிரித்து மகிழ்ந்த தமிழ் சினிமா ரைமிங்குகளை எழுதி எல்லோரையும் மகிழ்விக்கலாமே? 

சினிமா பாட்டில் சிரிப்பா சிரிச்சிட்டோம். இனி கவியரசர் பாட்டுக்கும் மேல் நாடு அறிஞர்களின் சிந்தனைக்குமான ஒற்றுமையைப் பார்ப்போம். சுயசரிதைகள் மற்றும் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான ஞானத்தைப் பெற முடியுமா? ஆம், ஒரு வெற்றிகரமான ஹோட்டல் தொழிலதிபரிடமிருந்து இதோ ஒரு சிறந்த கருத்து: "பெரும்பாலான கதைகள் 'இளவரசனும் இளவரசியும் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்' என்றுதான் முடியும். ஆனால், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு, உண்மையான கதையே திருமணத்திற்குப் பிறகுதான் தொடங்குகிறது! ஒருவரை-யொருவர் புரிந்துகொள்வதும், ஒருவருக்கொருவர் உறு-துணையாக இருப்பதும் எந்தவொரு திருமணத்திலும் மிக முக்கியமான அம்சங்களாகும்." சாதாரணமான ஒரு சிறிய உணவக உரிமையாளராகத் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று ஒரு தனித்துவமான ஐந்து நட்சத்திர ஹோட்டலின் உரிமையாளராக உயர்ந்திருக்கும் அவர்தான் விட்டல் வெங்கடேஷ் காமத் (Vithal Kamat). அவர் தனது சுவாரஸ்யமான வாழ்க்கை வரலாற்றை "இட்லி, ஆர்க்கிட் & வில் பவர்" (Idli, Orchid & Will Power!) என்ற தலைப்பில் இந்த வெற்றிகர வாழ்கைத் தத்துவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். 

பல்வேறு வகையான புத்தகங்களை ஆர்வத்துடன் வாசிக்கும் ஒருவராக, மகிழ்ச்சியான தம்பதிகளான ஆலன் மற்றும் பார்பரா பீஸ் (Allan & Barbara Pease) எழுதிய புத்தக வரிசையைத் திருமணப் பரிசாக வழங்க நான் தயங்காமல் பரிந்துரைப்பேன். பின்வரும் கேள்விகளுக்கான பதில்களை வெளிப்படுத்துவதன் மூலம், ஆண்-பெண் உறவு குறித்த புரிதலை இந்தப் புத்தகங்கள் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்கின்றன: பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் மற்றும் ஆண்கள் ஏன் குறைவாகப் பேசுகிறார்கள்? ஆண்கள் ஏன் ஒருபோதும் பெண்களிடம் பொய் சொல்லக்கூடாது? ஆண்கள் ஏன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்ய முடிவதில்லை? பெண்கள் ஏன் 'ரிவர்ஸ் பேரலல் பார்க்கிங்' (reverse parallel parking) செய்வதில் தடுமாறுகிறார்கள்? ஆண்கள் ஏன் தீர்வுகளை முன் வைக்கிறார்கள் ஆனால் அறிவுரைகளை வெறுக்கிறார்கள்? ஆண்கள் அமைதியாக இருக்கும்போது பெண்கள் ஏன் கவலை கொள்கிறார்கள்? காதல் விஷயத்தில் ஆண்கள் ஏன் குழப்பமடைகிறார்கள்? பெண்கள் ஏன் அழுகிறார்கள்? பெண்கள் எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருப்பதாக ஆண்கள் ஏன் உணர்கிறார்கள்? பெண்களின் அந்த ரகசியமான 'புள்ளிகள் கணக்கிடும் முறை' (point-scoring system) என்ன? ஆண்கள் ஏன் பொறுப்புகளை ஏற்கத் தயங்குகிறார்கள்? பெண்கள் ஏன் விஷயத்தின் மையப் பகுதிக்கு நேரடியாக வருவதில்லை? 

இவ்வளவு அதிகமாகச் சிரித்துக்கொண்டே, அதே சமயம் இவ்வளவு விஷயங்களைக் கற்றுக்கொண்ட அனுபவம் எனக்கு வேறு எதிலும் கிடைத்ததில்லை. நிச்சயமாக, கோட்பாடுகளை விட நிஜ வாழ்க்கை நமக்கு அதிகம் கற்றுக்கொடுக்கிறது; இருப்பினும், திருமணம் நம்மை நிலைகுலையச் செய்வதற்கு முன்பாக, அதற்கான ஒரு 'கற்றல் உரிமம்' (learner’s license) பெறுவது அவசியமல்லவா? தங்கள் துணை (கணவன்/மனைவி)  ஏன் தங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று யோசித்து இரவில் தூக்கமின்றித் தவித்த எவருக்கும் இந்தப் புத்தக வரிசை ஏற்றது. 

சிந்தனையைத் தூண்டும் அதே வேளையில் நகைச்சுவை உணர்வுமிக்க இந்நூல்களில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற உறவுமுறை நிபுணர்களான ஆலன் மற்றும் பார்பரா பீஸ் (Allan and Barbara Pease) ஆகியோர், மூளை குறித்த புதிய கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர் பாலினத்தவருடன் எவ்வாறு மகிழ்ச்சியான மற்றும் இணக்கமான உறவை வளர்த்துக்கொள்வது என்பதை நமக்குக் கற்றுத் தருகிறார்கள். ஒரு தம்பதியினரே இணைந்து எழுதியுள்ளதால், இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது; அதோடு, இதில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை ஒரு கூடுதல் சிறப்பம்சமாகும். 

இப்போது கவி ஞானி கண்ணதாசனின் கட்டுண்டவர்கள் படும் கஷ்டங்கள் பற்றிய பாடல்களுக்குத் திரும்புவோம். மலர்-வண்டு உவமைப் படி, ஒரு மலரை, ஒரு வண்டு சுற்றி வந்தால் ஓகே. அதுவே பல மலர்களைத் துரத்தும் 'பட்டாம்பூச்சியாக (படம்) இருந்து விட்டால்? 

எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி?

அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி!

ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி?

நான் ஆயிரம் பேர் பார்த்துவிட்டேன் அன்பு மீனாட்சி!” 

கவியரசர் கேள்வி-பதில் கில்லாடி மட்டுமில்லை  இந்தப் பாடலில் 'காதல் கல்யாணம் நல்லதா? அரேஞ்டு மாற்றியேஜ் சிறந்ததா?' என்று பட்டி மன்றமே நடத்தி விடுகிறார்! 

பெண்ணே பார்த்து துணை எடுத்தால் பாவமுண்டோ?

வெறும் கண்ணே பார்த்து தேர்வதிலே லாபமுண்டோ?

பெற்றவர்கள் பார்ப்பதிலே பெருமை என்னவோ?

அவர் மற்றவையும் பார்ப்பதினால் நன்மையல்லவோ…

சக்தி சிவன் செய்து கொண்ட சம்மந்தம் ஓன்று

அது தாய் தந்தை பார்த்ததல்ல கதைகளில் உண்டு…

ஆதிமூலம் செய்து கொண்ட காரியம் எல்லாம்

நம் நீதிமூலம் ஆகாது அன்பு மீனாட்சி.” 

பாட்டில் ஆரம்பத்திலேயே கவி கோடிகாட்டி விடுகிறார்: "மனம் பார்த்துக் கண் பார்த்து மாப்பிள்ளை தேர்ந்தவளே, இனம் பார்த்து இடம் பார்த்து எடுத்திருந்தால் கை விடுமா....?" 

சாதாரணமாக ஆண் தன் கடமை போல பெண்ணைத் துரத்திக்கொண்டு,"ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க? இன்று ஏன் இந்தக் கோபம் கொஞ்சம் நில்லுங்க!"  காதல் "நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு நடப்பது தானே ஓடாதீங்க!" என்று பாடுவான் (படம்: என் கடமை). எப்போதும் ஒரு பெண் பின்னால் ஆண்தான் ஓட வேண்டும் என்பதில்லை. இதோ ஒரு பாடல்—இதில் பெண் திருமண வாழ்வின் இன்பத்தை நாட, விரக்தியடைந்த ஆண் உணர்வுகளின் மற்றும் வாழ்வின் நிலையற்ற தன்மையைப் பற்றிப் பேசுகிறான் (படம்: தரிசனம்): 

"இது மாலை நேரத்து மயக்கம் பூமாலை போல் உடல் மணக்கும்

இதழ் மேலே இதழ் மோதும் அந்த இன்பம் தேடுது எனக்கும்

இது கால தேவனின் கலக்கம் இதை காதல் என்பது பழக்கம்

ஒரு ஆணும் ஒரு பெண்ணும்பெற போகும் துன்பத்தின் துவக்கம்" 

இந்தப் பாட்டில் ஒரு படி மேலே போய் 'இல்லறம் Vs துறவறம்' என்று பட்டி மண்டபம் கட்டி விடுகிறார்: 

"பனியும் நிலவும் பொழியும் நேரம் மடியில் சாய்ந்தால் என்ன?

பசும் பாலை போலே மேனி எங்கும்பழகி பார்த்தால் என்ன?

உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தால் என்ன?

தினம் ஓடி ஆடி ஓயும் முன்பே உண்மை அறிந்தால் என்ன?

உறவுக்கு மேலே சுகம் கிடையாது அணைக்கவே தயக்கம் என்ன?

இது ஓட்டை வீடு ஒன்பது வாசல் இதற்குள்ளே ஆசை என்ன? 

நம்ம ஊர் பட்டினதாரின் "ஒன்பது வாய் தோல் பை" உடம்பு ஞாபகம் வருகிறதா? சித்தர் பட்டினத்தார் நிலையாமையை நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்வதில் வல்லவர். அவர் அன்று பாடியது நாம் ஆசை வைக்கும் நாற்ற உடம்பைப் பற்றி: 

"இருப்பதுபொய் போவதுமெய் என்றுஎண்ணி நெஞ்சே

ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே – பருத்தொந்தி

நம்மதுஎன்று நாம் இருப்ப நாய் நரிகள் பேய்கழுகு

தம்மது என்று தாம் இருக்கும்தான்." 

தோன்றிய அனைத்து உயிர்களும் பொருட்களும் அழிந்து போகும் என்ற மாறாத உண்மையைச் சுட்டிக்காட்டி, நிலையான ஒன்றைப் பற்றிக்கொண்டு நிலையற்ற உடலைக் கைவிடுமாறு பட்டினத்தார் இப்பாடலில் நமக்கு அறி-வுறுத்துகிறார்: 

"எத்தனை நாள் கூடி எடுத்த சரீரம் இவை

அத்தனையும் மண்தின்பது அல்லவோ – வித்தகனார்

காலைப்பிடித்து மெள்ளக் கங்குல்பகல் அற்ற இடத்தே

மேலைக் குடியிருப்போமே." 

கண்ணதாசன் தனது கதாநாயகன் வாயிலாக அந்த முனிவரின் கருத்தையே வலியுறுத்தி, ஆசை கொண்ட பெண்ணை நிலையற்றவற்றை மறந்துவிடுமாறு பின்வருமாறு அறி-வுறுத்துகிறார்: 

முனிவன் மனமும் மயங்கும் பூமி மோக வாசல் தானே

மனம் மூடி மூடி பார்க்கும் போதும் தேடும் பாதை தானே

பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால் காதல் கானல் நீரே

இது மேடு பள்ளம் தேடும் உள்ளம் போகும் ஞான தேரே

இல்லறம் கேட்டால் துறவறம் பேசும் இதயமே மாறி விடு

நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை உன்னை நீ மாற்றி விடு" 

பட்டி மன்றம் நடத்தினால் கவித்தலைவர் முடிவும் சொல்லவேண்டும் அல்லவா? முடிவு கொடுக்கிறார் "படைத்தான் பூமியை இறைவன்" பாட்டில் (படம்: ஐந்து லக்ஷம்):

பெண்: குடும்பம் எதுக்கு சாரு

ஆண்: அது கோஆபரேட்டிவ் ஸ்டோரு

பெண்: இல்லறமென்பது என்ன

ஆண்: அது இருவர் அமைத்திடும் கோயில்

 

இருவரும்: ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து

ஆனதுதானே உலகம்

அதனால் தானே உலகம் முழுதும் மூண்டது பெருங்கலகம்!" 

தலைவர் பட்டிமன்ற முடிவை மட்டும் சொன்னால் போதுமா? அந்த முடிவுக்கான லாஜிக்கையும் விவரிக்க வேண்டும் அல்லவா? கவி ஞானி காரணம் தருகிறார் "இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம், இதுதான் எங்கள் உலகம்" பாடல் மூலம் (படம்: நவராத்திரி): 

"பாவமென்றால் ஒரு ஆணையும் பெண்ணையும்

இறைவன் படைப்பானா?

பயணம் போகும் பாதையில் திராட்சைக்

கொடியை வளர்ப்பானா? 

ஆண் மற்றும் பெண் எனும் எதிர் ஆற்றல் துருவங்களுக்கு இடையே பரஸ்பர காந்த ஈர்ப்பு விசை இல்லையென்றால், படைப்பு எவ்வாறு நிகழும்? ஒவ்வொரு உயிருள்ள ஜீவனுக்குள்ளும் பொதிந்துள்ள இயற்கையின் அந்தச் செயல்முறையைத்தான் கண்ணதாசன் வெளிப்படுத்துகிறார்; அதனை எவராலும் எளிதில் 'மறந்துவிட' முடியாது என்கிறார்: 

கவிஞன் பாடிய காவியம் படித்தால் போதை வரவில்லையா

கல்லினில் வடித்த சிலைகளைப் பார்த்தால்

மயக்கம் தரவில்லையா?

எதிலே இல்லை யாரிடமில்லை? எவரிதை மறந்துவிட்டார்?" 

இயற்கையின் இந்த விதியை தர்க்கரீதியாக விளக்குகிறார் கவிஞர் கீழுள்ள பாடலில் (“உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யாரறிவார் என் உள்ளம் என்னும் மாளிகையில் உன்னையன்றி யார் வருவார்”) (படம்: வாழ்க்கைப் படகு): 

"யாரிடத்தில் கேட்டு வந்தோம்? யார் சொல்லி காதல் கொண்டோம்?

நாயகனின் விதி வழியே நாமிருவர் சேர்ந்து வந்தோம்

ஒன்றையே நினைத்து வந்தோம் ஒன்றாக கலந்து வந்தோம்" 

முதல் வரியில் கவி ஞானி ஆண்களின் தலைக்கனத்துக்கு ஒரு குட்டு வைக்கிறார்: "உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யாரறிவார்?" ஆண்களின் பொதுவான புலம்பல், "நான் வெளியில் எத்தனை சாதித்து விட்டு வருகிறேன்! வீட்டுக்குள் என்னை எப்படி நாட்டாமை செய்கிறாள் இந்தப் பெண்? என்னை மதிப்பதேயில்லை!"  சுருக்கமாகச் சொன்னால், திருமணமான ஆண்களின் அகங்காரத்தை உடைக்கும் வகையில் கண்ணதாசன் இவ்வாறு கூறுகிறார்: "வெளியுலகில் நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்—ஒரு நிறுவனத்தின் தலைவராகவோ, அமைப்பின் தலைவராகவோ, பேச்சாளராகவோ, நடிகராகவோ, எழுத்தாளராகவோ அல்லது மன்னராகவோ கூட இருக்கலாம். ஆனால், உங்கள் வாழ்க்கைத் துணைவியைப் பொறுத்தவரை, நீங்கள் அவருடைய 'சொந்தமானவர்'; அவளுடைய இதயத்தில் நுழையக்கூடிய ஒரே நபர் நீங்கள்தான்." எனவே, 'வீடு' எனும் அந்த அன்பின் எல்லைக்குள் நீங்கள் நுழையும்போது, ​​உங்கள் பதவிகள் மற்றும் பட்டங்கள் அனைத்தும் அர்த்தமற்றதாகிவிடுகின்றன. 

காதலில் அகங்காரம் பலனளிக்காது. "காதலில் ஒருபோதும் 'நிற்க' முடியாது, அதில் 'விழுவது' (fall in love) மட்டுமே சாத்தியம்" என்று ஜக்கி மற்றும் எக்கார்ட் போன்ற நவீன ஆன்மீக வழிகாட்டிகள் நகைச்சுவையாகக் குறிப்பிடுகின்றனர். ஒருவரது பொய்யான ஈகோவை முழுமையாகக் கைவிடாத வரை, தம்பதியினரிடையே காதல் மலராது. அதெல்லாம் சரி சார், ஒரே மனித இனத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்கள் இயல்பான ஆற்றலைப் பயன்படுத்தி எவ்வாறு இணக்கமாகவும் ஒத்துழைப்புடனும் வாழ முடியும்? தம்பதியருக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சையில் இருபது ஆண்டுகால அனுபவம் கொண்ட டாக்டர் ஜான் கிரே (John Gray), தனது "Men, Women & Relationships" (ஆண்கள், பெண்கள் மற்றும் உறவுகள்) என்ற புத்தகத்தில், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் தங்களுக்குத் தகுதியான ஆரோக்கியமான மற்றும் ஆதரவான அன்பை அனுபவிக்க உதவும் எளிய, நடைமுறைக்கு ஏற்ற வழிமுறைகளை வழங்குகிறார். 

அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "ஒருவர் மீது ஏற்படும் தீவிர ஈர்ப்பு என்பது, இணக்கமாக்கப்பட வேண்டிய பல வேறுபாடுகளும் தீர்க்கப்பட வேண்டிய பல முரண்பாடுகளும் இருப்பதற்கான அறிகுறியாகும். நம்மைப் போன்றவர்கள் அல்லாதவர்களிடமே நாம் ஈர்க்கப்படுவதால், உறவுகளை மேம்படுத்துவதற்கான அடிப்படை அம்சம் மனிதர்கள் வேறுபட்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதே ஆகும். உறவுகள் மிகவும் குழப்பமானவையாக இருப்பதற்கு முக்கிய காரணம், நம் துணையும் நம்மைப் போலவே இருப்பார்கள் என்று நாம் தவறாக நினைப்பதே ஆகும். ஓரளவுக்கு அவர்கள் நம்மைப் போலவே இருந்தாலும், பல முக்கிய அம்சங்களில் அவர்கள் மாறுபட்டவர்களாகவே இருக்கிறார்கள்." 

இயல்பான குணாதிசயங்களின் அடிப்படையில் ஆண்களும் பெண்களும் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர், "பெண்கள் தங்கள் எண்ணங்-களையும் உணர்வுகளையும் விரிவுபடுத்திப் பேச முற்படும் போது, ​​ஆண்கள் பின்வாங்கவோ அல்லது சுருங்கிக் கொள்ளவோ ​​முனைகிறார்கள். மையத்தை நோக்கி ஈர்க்கும் விசையைப் (centripetal force) போல, ஆண்கள் பொதுவாக ஒரு மையப்புள்ளியை நோக்கியே நகர்கிறார்கள். பெண்களுடன் உரையாடும்போது ஆண்கள் ஏன் அடிக்கடி விரக்தி-யடைகிறார்கள் என்பதை இது விளக்குகிறது. பெண்கள் ஒரு விஷயத்தைப் பற்றி விரிவாகப் பேச விரும்புகிறார்கள், ஆனால் ஆண்கள் அவர்கள் நேரடியாக விஷயத்தின் சாராம்சத்திற்கு (point) வர வேண்டும் என்று விரும்புகி-றார்கள்," என்று கூறுகிறார். 

எதிர் பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜான் கிரே இவ்வாறு அறிவுறுத்துகிறார்: "பெண்கள் மன அழுத்தத்திலோ அல்லது உணர்ச்சிவசப்பட்ட நிலையிலோ இருக்கும்போது, ​​அவர்கள் ஒருவரைக் குற்றம் சாட்டவோ அல்லது குறை கூறவோ முயற்சிப்பதில்லை என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்; அவர்கள் தங்கள் மனபாரத்தைக் குறைத்து நிம்மதியடையவே தங்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார்கள். இத்தகைய தருணங்களில், ஒரு பெண் சொல்வதை மற்றவர் செவி மடுத்துக் கேட்பதே அவளுக்குத் தேவைப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான ஆண்களுக்கு இந்த ரகசியம் தெரிவதில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் துணையைத் தேற்ற நினைத்து, 'வருத்தப்படத் தேவையில்லை' என்று கூறவோ அல்லது பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் சொல்லவோ முற்படுகிறார்கள். பிரச்சினையைச் சரிசெய்யும் இத்தகைய முயற்சி நிலைமையை இன்னும் மோசமாக்கு-கிறது." 

பெண்ணின் இந்த மாறிக்கொண்டே இருக்கும் மன நிலையை படம் பிடிக்கிறார் கவி ஞானி கண்ணதாசன் "பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா" பாடலில்  (படம்: நினைத்தாலே இனிக்கும்): 

"ஒரே ராகம்தனை பாடும் விதம் மாறும் தினம் மாறும்

மேகங்களில் காணும் படம் மாறும் தினம் மாறும்

அழகிய கலை அது இவளது நிலை இது

ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா!" 

ஆண்கள் செயல் மற்றும் முடிவுகளை மையமாகக் கொண்டவர்கள்; ஆனால் பெண்கள் உறவு மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டவர்கள். ஆண் மற்றும் பெண் இருபாலரின் வெவ்வேறு தேவைகள் மற்றும் அவர்களின் தகவல் தொடர்பு முறைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆசிரியர் John Gray இவ்வாறு விளக்குகிறார்: 

"ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான மோதல் மற்றும் அதிருப்திக்கான முக்கிய காரணங்களில் ஒன்று தகவல் தொடர்பு ஆகும். ஏனெனில், ஆண்களும் பெண்களும் வெவ்வேறு நோக்கங்களுக்காகவே பேசுகிறார்கள் மற்றும் செவிமடுக்கிறார்கள். ஆண்கள் பிரச்சினைகளைத் தீர்ப்ப-தற்கான தகவல்களைச் சேகரிக்கும் நோக்கில் செவி மடுக்கிறார்கள்; ஆனால் பெண்கள் மற்றவர்களுடன் இணக்-கத்தை ஏற்படுத்திக்கொள்ளவோ ​​அல்லது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவோ ​​செவிமடுக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட கருத்தைச் சொல்ல வேண்டியிருக்கும் போதோ அல்லது வேறொருவரின் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவும்போதோ ஆண்கள் பேசுகிறார்கள். ஆனால் பெண்கள் ஒரு தலைப்பைப் பற்றி விரிவாக ஆராயவும், அதே சமயம் தங்களைப் பற்றித் தாங்களே புரிந்துகொள்ளவும் பேசுகிறார்கள்!" 

எதிர் பாலினத்தவருடன் இவ்வளவு காலம் வாழ்ந்த பிறகு, கோட்பாட்டளவில் எது என்னவென்று நம் சொந்த அனுபவத்தின் மூலம் நாம் அனைவரும் அறிவோம்; ஆனால் அன்றாட வாழ்க்கையின் சவால்களையும் சிக்கல்களையும் ப்ராக்டிகலாக  எவ்வாறு கையாள்வது? இதற்கான நடை முறைக்கு ஏற்ற சில ஆலோசனைகளை அவர் வழங்குகிறார்: "ஒவ்வொரு நாளும், தான் நேசிக்கப்படுகிறோம் என்பதற்கான வாய்மொழி சார்ந்த உறுதிப்படுத்தல் ஒரு பெண்ணுக்குத் தேவைப்படுகிறது. அதாவது, 'நான் உன்னை நேசிக்கிறேன்' (“I love you”) என்று சொல்வது போன்றவற்றை இது குறிக்கிறது. ஆண்கள் சில சமயங்களில் 'நான் உன்னை நேசிக்கிறேன்' என்று சொல்வதை நிறுத்திவிடுகிறார்கள்; ஏனெனில் அவர்கள் புதிதாகவும் வித்தியாசமாகவும் இருக்க விரும்புகிறார்கள். அதைத் திரும்பத் திரும்பக் கேட்பதால் பெண்கள் சலிப்படையலாம் அல்லது அலுத்துப்போகலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்." ஆசிரியர் தனது வாதத்தை இவ்வாறு நிறைவு செய்கிறார்: "உண்மையான அன்பும் உணர்வுபூர்வமான ஆதரவும் கொண்ட ஒரு உறவை உருவாக்குவதற்கு ஏழு அடிப்படை உணர்வுசார் தேவைகள் அல்லது மனப்பான்மைகள் அவசியமானவை: அன்பு, அக்கறை, புரிதல், மரியாதை, பாராட்டு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் நம்பிக்கை." 

அது சரி, கண்ணதாசனில் "ஹலோ மிஸ் ஹலோ மிஸ்" பார்த்தோம். அவரின் "ஹலோ ஹலோ சுகமா? அம்மா நீங்க நலமா?" பார்க்கவேண்டாமா? (படம்: தர்மம் தலை காக்கும்). தம்பதிகள் தலையை எப்படி காப்பாற்றி வைத்துக் கொள்ளலாம் என்கிற டெக்னிக்குகளை அடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்... இல்லை, தலைவலி-யாகிவிட்டால், தப்பான  வழியில் போய் தவறான நம்பரை டயல் செய்துவிட்டு "ஹலோ மை டியர் ராங் நம்பர்" என அது 'மன்மத லீலை' யாக (படம்) மாறி விடும். 

-ஜேயெஸ் (www.jeyes.in)

(Both the English & Tamil versions of this series are available at: https://jeyeswrites.blogspot.com/?m=1)

 

Comments

Popular posts from this blog

Book Review: Most and More by Mahatria Ra

Book Review: Jugaad Innovation by Navi Radjou, Jaideep Prabhu & Simone Ahuja

Who Am I?