கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-13)
"தட்டுங்கள்
திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கப்பெறும், கேளுங்கள் கிடைக்கும்" என்றார் ஏசு. "எதை உங்களால் உணர
முடிகிறதோ, அதை உங்களால் உருவாக்கவும் முடியும்" என்று
மேற்கத்திய சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள். இந்திய ஆன்மீகம் என்ன சொல்கிறது?
பல இந்திய ஆன்மீக மரபுகள் இது போன்ற கருத்துக்களை
வெளிப்படுத்தினாலும், அவை வழக்கமாக ஒரு முக்கியமான
நிபந்தனையைச் சேர்க்கின்றன: வெறும் விருப்பம் மட்டும் போதாது; அது சரியான செயல், கர்மம் மற்றும் இறைவனின்
திருவுளம் ஆகியவற்றுடன் இசைந்ததாக இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில்
சொல்வதானால், வெறும் ஆசை மட்டும் பலன் தருவதில்லை; மாறாக, சரியான நோக்கம், சரியான
முயற்சி மற்றும் இறைவனின் அருள் ஆகிய மூன்றும் இணைந்தே பலன் அளிக்கின்றன என்பதே
இந்திய ஆன்மீகத்தின் பொதுவான கருத்தாகும்.
கட உபநிடதம் செயலற்றுக் காத்திருக்காமல், தீவிரமாகத்
தேடுமாறு அறிவுறுத்துகிறது. முண்டக உபநிடதம், "உண்மையை
உண்மையான ஆர்வத்துடன் தேடுபவரே அதை அடைகிறார்" என்று கூறுகிறது. சாந்தோக்ய
உபநிடதம், "உங்களின் ஆழ்ந்த நம்பிக்கையே உங்கள்
வாழ்க்கையை வடிவமைக்கிறது" என்று முடிவுரைக்கிறது. பிருஹதாரண்யக உபநிடதம்
அதற்கான வழியை இவ்வாறு காட்டுகிறது: "மனிதன் விருப்பத்தால் ஆனவன். விருப்பம்
எத்தகையதோ, அத்தகையதே உறுதிப்பாடு; உறுதிப்பாடு
எத்தகையதோ, அத்தகையதே செயல்; செயல்
எத்தகையதோ, அத்தகையதே விதி." பதஞ்சலியின் யோக
சூத்திரங்கள், "தீவிரமான பயிற்சி செய்பவர்களுக்கு
வெற்றி விரைவாகக் கிடைக்கிறது" என்று கூறுகின்றன. திருவள்ளுவர் தனது 619-வது குறளில், "விதி உதவாவிட்டாலும், உண்மையான முயற்சி ஒருபோதும் பலனளிக்காமல் போகாது" (“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.”) என்று உறுதியளிக்கிறார். சுவாமி விவேகானந்தர் தனது
சொற்-பொழிவுகளில், "ஒரு சிந்தனையை எடுத்துக்கொள்ளுங்கள்.
அந்த ஒரு சிந்தனையையே உங்கள் வாழ்க்கையாக
ஆக்கிக்கொள்ளுங்கள்... இதுவே வெற்றிக்கான வழி" என்று கூறினார். ரமண மகரிஷி,
"விடுதலைக்கான விருப்பமே விடுதலையின் தொடக்கம்" என்பதை
உறுதிப்படுத்துகிறார். தேடுதலே கண்டடைதலின் தொடக்கமாகும். இறுதியாக மகாத்மா
காந்தியின் வார்த்தைகள்: "மனிதன் என்பவன் அவனது சிந்தனைகளின் விளைவே ஆவான்.
அவன் எதைச் சிந்திக்கிறானோ, அதுவாகவே ஆகிறான்." இது
உபநிடதக் கருத்துக்களையும் நவீன ஊக்கமளிக்கும் சிந்தனைகளையும் ஒத்திருக்கிறது.
கவி ஞானி
கண்ணதாசன் (படம்: ஊட்டி வரை உறவு) "தேடினேன் வந்தது..." என்ற பாடலில்
இவ்வாறு பாடியுள்ளார்:
“தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது
வாசலில் நின்றது, வாழவா என்றது”
"தெய்வ மாளிகை
திறந்ததா" பார்ப்போம். தலைக்குள் நடக்கும் ரசாயனக் குழப்பத்தால், மனிதன் பிறந்த காலத்திலிருந்து 'நம்முடையதுதான்'
ஸ்பெசல் காதல் என்று ஜோடிகள் நினைக்கிறார்கள். கவிஞர் இப்படிப்
பாடினார் (படம்: பலே பாண்டியா):
“ஆதி மனிதன் காதலுக்குப் பின், அடுத்த காதல் இது தான்
ஆதாம் ஏவாள் ஜோடிக்குப் பின்னே, அடுத்த ஜோடி இது தான்!”
“கண்ணிலே கண்டதும்
எண்ணமே மாறினேன், காதிலே கேட்டதும் காதலில் முழ்கினேன்”
என்று தொடர்ந்த அவர் 'பாவ மன்னிப்பு' படத்தின் 'வந்த நாள் முதல்...' பாட்டில், “இன்பமும் காதலும் இயற்கையின் நீதி”
என்று சொல்லி விட்டார். எலிசபெத் கில்பர்ட் தனது “ஈட் ப்ரே லவ்”
(Eat Pray Love) என்ற புத்தகத்தில், காதல்
என்பது ஒரு போதை போன்றது என்கிறார்: “ஒவ்வொரு மோக அடிப்படையிலான காதல் கதையின்
அடையாளமே போதைதான். நீங்கள் ஆராதிக்கிறவர், உங்களுக்கு
வேண்டும் என்று நீங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ளத் துணியாத, போதையூட்டும்
ஒரு பிரமை தரும் அளவை உங்களுக்கு அளிக்கும்போதுதான் இது எல்லாம் தொடங்குகிறது –
ஒருவேளை, இடி முழக்கம் போன்ற காதலும் கொந்தளிக்கும்
கிளர்ச்சியும் நிறைந்த ஒரு உணர்ச்சி வேகப்பந்து போல. விரைவில், எந்தவொரு போதை அடிமையின் தீராத வெறியுடன், அந்தத்
தீவிரமான கவனத்திற்காக நீங்கள் ஏங்கத் தொடங்குகிறீர்கள்.”
கண்ணனைக்
காதலிக்கும் தாசன் அவர்களோ காதலோடு ஆன்மிகத்தையும் கலக்கிறார் இந்தப் பாடலில்
(படம்: சீர்வரிசை):
"கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே"
இது போன்ற ஒரு காதல் பாடலில், "ஆன்மீகம் எங்கே வருகிறது?"
என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், இறைவனைத்
தேடுபவர் கண்ணனை ஒரு தனிநபராகப் பார்க்காமல் 'கிருஷ்ண உணர்வு'
(Krishna Consciousness) என்று கருதினால், அப்பாடலின்
அனைத்துப் பொருளும் மிகச் சரியாகப் பொருந்திவரும். மேற்கத்திய நாடுகளில் இதே
கருத்து பிற்காலத்தில் 'கிறிஸ்து உணர்வு' (Christ
Consciousness) என்று குறிப்பிடப்பட்டது. கடைசீ வரியில் கண்ணன் என்கிற
consciousness-இலிருந்துதான் எண்ணமே (mind) வருகிறது என்ற மகா பெரிய தத்துவதோடு முடிக்கிறார் கண்ணதாசன். இந்திய ஞானிகளும்,
இதையே சொல்கிறார்கள். மேலும், மனதிலிருந்துதான்
உடலே ஜனிக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகின்றனர். மேலை நாட்டு neuroscience
விஞ்ஞானமும் இதை உறுதி செய்கிறது. Dr ராமசந்திரன்
அவருடைய 'Phantoms in the Brain' என்ற புத்தகத்தில், மூளையிடம் உடலின் எல்லா பாகங்களின் மேப் உள்ளது; GPS போல அதை வைத்தே மூளை அதன் உறுப்புகளை 'அறிந்து'
கொண்டு control செய்கிறது, ANS (ஆடோனோமோஸ் நெர்வோஸ் சிஸ்டம்) மற்றும் CNS (சென்ட்ரல்
நெர்வோஸ் சிஸ்டம்) மூலமாக. கவிஞர் குறும்பாக இக்காதல் பாடலை, "ஜய கண்ணா முகுந்தா முராரே!" என்று கிருஷ்ண பஜனையுடன் முடிக்கிறார்.
இது தவிர
கணக்கிலடங்காத கண்ணன் பாடல்களில் தாசன் காதலாகிக் கசிந்து உருகியிருக்கிறார்.
எல்லா பாடல்களும் மனதில் இழையோடும் இசை அமுதம். கண்ணன் இல்லாமல் காதல் இல்லை. கண்
இல்லாமலும் காதல் இல்லை. லவ் is blind. “உன்னை கண் தேடுதே, உன் எழில் காணவே…. உளம் நாடுதே” என்றார் கு மா
பாலசுப்ரமணியன் "கணவனே 'கண்'-கண்ட
தெய்வம்" படத்தில். “கண்களின் தண்டனை காட்சி வழி,
காட்சியின் தண்டனை காதல் வழி”, என்று பாடினார்
கண்ணதாசன் இரண்டு மனம் வேண்டும் பாட்டில் (படம்: வசந்த மாளிகை).
"காதல்
கண்மூடித்தனமானது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் திருமணம்
அந்தப் பார்வையைத் திரும்பக் கொண்டுவருகிறது" என்று ஒருவர் கூறினார். காதல்
மற்றும் திருமணம் குறித்த சில மேற்கத்திய நகைச்சுவை மற்றும் ஞானம் கலந்த
கருத்துகளை இப்போது பார்ப்போம். "மிக நீண்ட வாழ்க்கை வரலாற்றில் காதல் என்பது
மிகக் குறுகிய முதல் அத்தியாயம்." காதல் திருமணம் செய்துகொண்ட பலருக்கு
அப்படித்தான் தோன்றுகிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொள்பவர்களுக்கு இது
ஒரு அத்தியாயம் கூட அல்ல; ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும்
மிகச் சிறிய கணநேரம் மட்டுமே அது (இருப்பினும், இப்போதெல்லாம்
மணமகனும் மணமகளும் அடுத்த அறையில் தனியாகச் சந்திக்க 'அனுமதி'
அளிக்கப்படுகிறது). காதலை வேறு விதமாகவும் சொல்லலாம்: இளமைக்கால
விளம்பரங்-களுக்கும், பணம் செலுத்திய
பிறகு கிடைக்கும் அந்தப் பொருளின் எதார்த்த நிலைக்கும் இடையிலான ஒரு காதல் கலந்த
இடைவேளை அது.
நடுத்தர
வர்க்கத்தின் எதார்த்தத்தைச் சுட்டிக்காட்டும் மற்றொரு நகைச்சுவைவாதி, "காதல்
முடிந்து, வீட்டுக்கடன் தொடரும் போதுதான் திருமண வாழ்க்கை
ஆரம்பமாகிறது" என்கிறார். காதலின் போது ஒவ்வொரு கிசுகிசுப்பும் ஒரு அழகான
கவிதையைப் போல ஒலிக்கும். ஒரு நாளைக்கு நூறு முறை 'ஐ லவ் யூ'
(I love you) என்று சொல்வதுதான் காதல். திருமணத்திற்குப் பிறகு,
அந்த இடத்தில் "கதவைச் சரியாகப் பூட்டினாயா?" என்ற கேள்வி வந்துவிடுகிறது. "தன் காதலியைத் தன் கைகளில் ஏந்திச்
சுமப்பதற்குப் பதிலாக, அவள் கொண்டுவரும் பயணப் பெட்டிகளை (luggage)
ஒரு ஆண் சுமக்கத் தொடங்கும்போது காதல் முடிவுக்கு வருகிறது"
என்பது மற்றொரு எதார்த்தமான கருத்து.
மற்ற சில
உண்மையான சிந்தனைகள் இவை: "திருமணம் என்பது ஒரு புத்தகம்; காதல் என்பது
அதில் அழகிய ஓவியங்களுடன் கூடிய முதல் அத்தியாயம்." "திருமணம் என்பது
ஒரு பணிமனை (workshop); காதல் என்பது அதிலுள்ள காபி
இடைவேளை." மற்றும் "சோகமான மற்றும் நீண்ட திருமணத் திரைப்படம்
தொடங்குவதற்கு முன், காதலின் கவர்ச்சிகரமான நகைச்சுவைத்
துணுக்குக் காட்சியை (trailer) ரசியுங்கள்." 'சரி அன்பே' (Yes, dear) என்று சொல்லும் ஒரு ஆண்,
'உனக்கு எது சிறந்தது என்று தோன்றுகிறதோ அதையே செய் அன்பே' என்று சொல்லக் கற்றுக்கொள்வதற்கு முந்தைய ஒரு குறுகிய காலமே காதல் காலம்.
காதலின் போது, ஒவ்வொரு மௌனமும் அர்த்தமுள்ளதாக
இருக்கும். ஆனால் பிற்காலத்தில், அந்த மௌனம் பெரும்பாலும் இருவரில்
ஒருவர் அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருப்பதாலேயே ஏற்படுகிறது. இறுதியில், இருவருமே மற்றவர் மிகச் சரியானவர் (perfect) என்று
நம்பும் ஒரே தருணம் காதல் காலம் மட்டும்தான்.
"காதல்
குருட்டுத்தன்மை கொண்டது" (Love is Blind) என்ற இந்தப்
பழமொழி பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் உள்ளது. இதன் மிகவும் பிரபலமான ஆரம்பகால
இலக்கியப் பயன்பாடு, ஜெஃப்ரி சாசரால் 'தி
மெர்ச்சன்ட்ஸ் டேல்' என்ற நூலில் பயன்படுத்தப்பட்டது:
"காதல் நாள் முழுவதும் குருடானது, அதனால் எதையும்
பார்க்க முடியாது." வில்லியம் ஷேக்ஸ்பியர் இதை 'தி
மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ்' (Merchant of Venice) நாடகத்தில்
பிரபலப்படுத்தினார்: "காதல் குருட்டுத்தன்மை கொண்டது, காதலர்கள்
தாங்கள் செய்யும் அழகான முட்டாள்தனங்களைக் காண முடியாது." அவர் இந்தக்
கருத்தை 'எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்' (A Midsummer
Night’s Dream) நாடகத்திலும் மீண்டும் கூறுகிறார்: "காதல்
கண்களால் பார்ப்பதில்லை, மனதால் பார்க்கிறது; எனவே, சிறகுகளுடைய காமதேவன் (Cupid) குருடனாகச் சித்தரிக்கப்-படுகிறான்." இதன்
பொருள் என்னவென்றால், காதலில் இருப்பவர்கள் பெரும்பாலும்
தவறுகளைப் புறக்-கணிக்கிறார்கள் அல்லது பகுத்தறிவோடு குறைவாக
மதிப்பிடுகிறார்கள். "இதயத்திற்குச் செல்லும் வழி கண்கள் வழியாகும்."
இது தொடர்பான பல சொற்றொடர்களும் உள்ளன: "முதல் பார்வையிலேயே காதல்."
"கண்கள் ஆன்மாவின் ஜன்னல்கள்." "கண்கள் இதயத்தின்
கண்ணாடிகள்." இவை, பார்வை ஈர்ப்பு அல்லது கண் தொடர்பு
பெரும்பாலும் காதல் பாசத்தைத் தொடங்குகிறது என்பதை வலியுறுத்துகின்றன.
காதலுக்கு
கண்ணில்லை என்று பார்த்தோம். கண்ணில்லாமல் காதலும் இல்லை அல்லவோ? கவியரசர் காதலரின்
கண்-மயக்கத்தை "உன்னைக் காணாத
கண்ணும் கண்ணல்ல" என்றார். "ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்'
என்றும் சொன்னார். "எண்ணிரண்டு பதினாலு வயது" பாடலில்
கண்ணிலே தெரியும் காதலைக் காட்டினார் இப்படி: "அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது." அதே பாட்டில் "சிறு துன்பம் போன்ற இன்பத்தினிலே
இருவருமே கிடந்தோம்" என இன்பம்-துன்பம் இணைந்து வரும் காதலின் தன்மையை
சுட்டிக் காட்டினார். பின்வரும் பாடலில் கண்ணதாசன் காதல் கொண்ட பெண்ணாக உருமாறி
நுட்பமான உணர்வுகளை மென்மையான வார்த்தைகளில் பாடுகிறார் (படம்: இதய கமலம்):
“என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே”
அவளுடைய கண்கள், இதயம் (ஆசை) மற்றும் பேச்சு ஆகியவை வகிக்கும் முரண்பாடான பங்கை இப்பாடலில்
அவர் மீண்டும் குறிப்பிடுகிறார்:
“விழி பார்க்கச் சொன்னாலும் மனம் பேசச் சொல்லாது
மனம் பேசச் சொன்னாலும் வாய் வார்த்தை வராது
அச்சம் பாதி ஆசை பாதி பெண் படும் பாடு”
கீழ்
வரும் பாடலில் இன்னும் மேலே போய் நெஞ்சத்தைத் வருடுகிறார் (படம்: தாயை காத்த
தனயன்):
"மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி
வா வா என்றது
ஆடி கிடந்த கால் இரண்டும்
நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது"
கவி
கம்பன் தன் இராமாயணத்த்தில் பாடிய "ஐயோ எனும் இடை"யை கண்ணதாசன் தன் இப்பாடலில் நயமாகக் கொண்டு
வருகிறார்:
“அன்ன கொடி நடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோ என்றது
வண்ண கொடியிடை கண்ணில் விழுந்து
மெய்யோ பொய்யோ என்றது
கன்னி பருவம் உன்னை கண்டு காதல் காதல் என்றது”
இப்பொது
கன்னடத்துப் பைங்கிளியும் வாத்தியாரும் உங்கள் கண்களில் நிழலாடினால் நான்
பொறுப்பல்ல. இது, சக்திவாய்ந்த காட்சித் தூண்டல்கள்
மற்றும் உணர்வுபூர்வமான மொழி ஆகியவற்றின் கலவையால் உங்கள் உடலில் 'நியூரோ லிங்குவிஸ்டிக் புரோகிராமிங்' (NLP) மூலம்
பதியப்பட்ட ஒரு 'உணர்வுகளின் கலவை'யை (dynamic
cocktail), உயிரியல் செல்கள் மீண்டும் நினைவுகூரும் ஒரு
நிகழ்வாகும். அடுத்து என்ன, கண் போன போகிற இடத்தில் காதலனின் காலும் போக வேண்டியதுதானே? (படம்: இதயக் கமலம்):
“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ
நீ வாழும்
இடமெல்லாம் நானும்
வருவேன் வா வா வா”
காதலின் ஆரம்பக் கட்டத்தில், இருவருமே தங்கள் அகங்காரத்தால் ஆன தற்காப்பு உணர்வை ஒருவருக்கொருவர்
விட்டுக்கொடுத்து, தங்கள் இருப்பில் ஒரு முழுமையை உணர்கிறார்கள் என்று எக்கார்ட் டோல் (Eckhart Tolle) கூறுகிறார்; இருப்பினும், அந்த உணர்வு ஒரு குறுகிய காலத்திற்கே
நீடிக்கிறது. சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது "Emotion & Relationships" (உணர்ச்சிகளும்
உறவுகளும்) என்ற இரட்டை (டூ இன் ஒன்) நூலில் இவ்வாறு கூறுகிறார்: "உறவுகள்
என்பவை வெறும் இணக்கத்தன்மை, தோழமை அல்லது ஒருவரிடமிருந்து ஒருவர் மகிழ்ச்சியைப் பெறுவது பற்றியவை அல்ல.
உறவுகள் என்பது ஒருவிதமான ஒன்றிணைப்பை அடைவதற்கான வாய்ப்பாகும்; இது ஒரு உயர்ந்த சாத்தியத்திற்கான
பாதையை அமைத்துத் தருகிறது."
காதல் என்பது அடிப்படையில் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் ஒரு செயல்முறை
என்று அவர் குறிப்பிடுகிறார். ஒருவரை நேசிப்பது என்பது, உங்கள் தனிப்பட்ட எல்லைகளை உடைத்து, அவர்களை உங்கள் சுயத்தின் ஒரு பகுதியாக
ஏற்றுக்கொள்வதாகும். முன்னதாக, மீராபாய், ராதா மற்றும் ரூமி போன்ற ஞானிகள் இறைவனிடம் முழுமையாகச் சரணடைவதைப்
(சரணாகதி) பற்றிப் பேசியுள்ளனர். இந்தச் சூழலில், காதலர்களுக்கு இடையிலான காதல் என்பது
தெய்வீகக் காதலுக்கான ஒரு கண்ணாடியாகப் பார்க்கப்படுகிறது. "நீங்கள்"
என்ற உணர்வே இல்லாத நிலை வரும் வரை, உங்கள் அறிவு, உடல் மற்றும் ஆன்மா ஆகிய அனைத்தையும் உங்கள் காதலரிடம் அல்லது காதலியிடம்
முழுமையாகச் சரணடைகிறீர்கள். கவிஞர் கண்ணதாசன் பின்வரும் வரிகளில் இச்சிந்தனைகளின்
சாராம்சத்தை அழகாகப் பதிவு செய்துள்ளார்:
“உள்ளம் உள்ளது என்னிடம், உரிமை
உள்ளது உன்னிடம்
இனி நான்
போவது எவ்விடம், எது சொன்னாலும் சம்மதம்
பொங்கும்
மஞ்சள் குங்குமம், பூவும் உன்னிடம் சங்கமம்
எதுவும்
இல்லை என்னிடம், என்னை தந்தேன் உன்னிடம் வா வா வா”
இருவரும் இரண்டற கலப்பது பற்றி கவிஞர்
பழைய தமிழ் நூல்களில் இருந்தும் எடுத்து எல்லார்க்கும் புரியும் எளிய தமிழில் இந்த
பாடலில் கொடுக்கிறார் (படம்: வாழ்க்கை படகு):
“நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே …
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே”
சங்கப்
புலவர் செம்புலபெயனீரார் எழுதிய குறுந்தொகை பாடல் இது: “யாயும் ஞாயும் யாராகியரோ? எந்தையும் நுந்தையும்
எம்முறைக் கேளிர்; யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல்நீர் போல, அன்புடை நெஞ்சம் தாம்
கலந்தனவே. (செம்மண்ணில் கலந்த நீர் சிவப்பாதல் போல)”.
'Wherever you go, there you are' (நீங்கள் எங்கு சென்றாலும்,
அங்கே நீங்களே இருக்கிறீர்கள்) என்ற தனது விழிப்புணர்வு (mindfulness)
குறித்த நூலில், ஜான் கபாட்-ஜின் (Jon Kabat-Zinn) ஒரு முக்கிய உண்மையை வலியுறுத்துகிறார்: “நீங்கள்
எப்போதும் உங்களுடனேயே இருப்பதால், அமைதியைக் கண்டடைவதற்கான
ஒரே வழி, தற்போதைய கணத்தில் முழுமையாக நிலைத்திருப்பதும்,
உடல் மற்றும் மன ரீதியாக நீங்கள் இருக்கும் நிலையை அப்படியே
ஏற்றுக்கொள்வதுமே ஆகும்.” காதலர்கள் ஒருவருக்கொருவர்
முன்னிலையில் தங்களையே மறந்துவிடுகிறார்கள் என்று கவிஞர் கூறுகிறார்.
வள்ளுவர் தன் குறளில் “யான் நோக்கும் காலை நிலன் நோக்கும்; நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்”
என்று பாடினார் பல நூற்றாண்டுக்கு முன். கவிஞரோ அதை எளிமைப் படுத்தி இப்படிப்
போடுகிறார்:
“உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே ….
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே”
இதில்
பாதியை வேறு விதமாகவும் பாடியிருக்கிறார் கண்ணதாசன் இப்படி (படம்: பாச மலர்):
"பாட்டொன்று கேட்டேன், பரவசமானேன்
நான் அதை பாடவில்லை
பாவையின் முகத்தை
பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை"
அவள் அதை பார்க்கவில்லை என்றால் 'அவர் அவளைப்
பார்க்கிறார்' என்பது
அவளுக்கு எப்படி தெரியும்? அதுதான் பெண்களின்
கண்களின் வித்தை.
இறுதியில், இயற்கையின்
நரம்பியல் வேதியியலே (neurochemistry) வெற்றி பெறுகிறது. முடிவாக,
காதலில் மயங்கிய அந்த மூளை குறுக்கிட்டு, "நாம் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள்" என்று இருவரையும் நம்ப
வைக்கிறது. ஆனால், குறும்புக்காரக் கவிஞரோ, "ஆஹா... என்ன பொருத்தம்!" என்று ரசனையுடன் வியக்கிறார் (படம்: ரகசிய
போலீஸ் 115):
“ஆஹா என்ன பொருத்தம், நமக்குள் இந்தப் பொருத்தம்
காதல்
என்னும் நாடகத்தில், கல்யாணம்
சுபமே!”
இரு மனம்
பொருந்திய இருவரும் மணந்து கொண்டார்களா? நமக்கும் கவிஞர் மாதிரி "கையோடு
கை சேர்க்கும் காலங்களே, கல்யாண சங்கீதம் பாடுங்களேன்"
(படம்: காவிய தலைவி) என்று பாடத் தோன்றுகிறது.
கண்ணதாசன் பாடின மாதிரி காதல் ஜோடிகளுக்கு கல்யாண கமிட்மென்ட்க்குள்
வருகிற குழப்பம் இன்னும் இருக்கிறது. அவள் அவசரப் படுகிறாள், அவன் தயங்குகிறான்
(சம்பாதிச்சு வச்சுக் காப்பாத்தணுமே!) (படம்: கடவுளை கண்டேன்):
“அவன்: கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும்
சொல்லாமே தெரிஞ்சிக்கணும் தொடாமே பேசிக்கணும்
அவள்: கண்ணால் பாத்துக்கணும் என்னை சேர்த்துக்கணும்
சொல்ல கேட்டுக்கணும் ஜோடி போட்டுக்கணும்
கண்ணால் பாத்துக்கணும் என்னை சேர்த்துக்கணும்
அவன்: உண்மையில் குழப்பம் மன்னிக்கணும்
ஊரையும் கொஞ்சம் எண்ணிக்கணும்
அவள்: என்னாலும் நீதான் சொல்லிக்கணும்
என்னை ரெண்டு கண்ணாலே அள்ளிக்கணும்
அவள்: பாக்குற பார்வையில் விளங்கலையா
நான் பயப்படுரேனு தெரியலையா
அவன்: கேக்குற கேள்வியும் புரியல்லையே
அந்த கேள்விக்கு பதிலும் தெரியல்லையே
அவன்: எனக்கும் மனசு இருக்குதே எதுக்கும் காலம் வரணுமே
அவள்: சுருக்குன்னு கல்யாணம் முடிச்சிக்குவோம்
இன்ப சிறைக்குள்ளே நம்மை அடைச்சிக்குவோம்"
ஜோடியை ஏன்
கல்யாண சிறைக்குள் தள்ள அவசரப் படணும்? கொஞ்சம் அவர்களுக்குள் தெளிவு வரட்டுமே.
சற்று பொறுத்திருப்போமே, அடுத்த எபிசொட் வரை.....
-ஜேயெஸ் (www.jeyes.in)
Comments
Post a Comment