Corona times - Poems in Tamil

 குருவி - குளவி - கூடு:

 

நம் வீட்டில்

குருவி கூடு கட்டும் போது

குதூகலப் படுகின்ற நாம்,

குளவி வீடு கட்டும்போது மட்டும் 

விரட்டுகிறோமே ஏன்?

'கொஞ்சு'கிற பிறவியை விட்டு 

'கொட்டு'கின்ற துறவியிடம் போவார் யார்?

 

இனிக்கப் பேசுபவரைச் சுற்றியும், குறையே சொல்லிக் குட்டிக் 

கொட்டுபவரைத் தள்ளியும் வைப்பர் மனிதர்!


====================

காலமான நேரம்:

 

"குளிக்கப் போகாம கைப்பேசிய ஏன் நோண்டிட்டிருக்கீங்க?" என்றது விசாரணைக் கமிஷன்.

 

"என்னுள் கவிதை ஊற்று பொங்கிக் கொண்டு இருக்கு!" என்ற பதில் சொல்லும் முன் அடுத்த அறிவிப்பு விரைவில் வந்தது:

 

 "பாத்ரூமில் தண்ணி நின்னு போச்சு!"


====================

பலித்தது சாபம் :

 

'வடிகால்' கையெழுத்து பத்திரிகை நடத்திய நாட்களில் கிடைத்த சாபம்:

 

"வளர்ற வயசில கதை சொல்லிண்டிருந்தால்  பிற்காலத்தில் மாடு மேய்ச்சுத்தான் பொழைக்கணும்!"

அட! நாற்பது வருஷம் திரும்பிப் பார்த்தால்,  Corporate Trainer ஆகி, வாழ்க்கை முழுவதும் பத்தாயிரம் கம்பனி மா(டுகளை)ணவர்களை கட்டி மேய்க்கும் 'கண்ணனாகி'னதில், பெத்தவர் சாபம் பலிச்சிருக்கு!

 

  (நெருங்கிய  வட்டத்தில் jeyes ஐ  கண்ணன்  என்று அழைப்பார்கள்..)

=======================


கோபமான கொரோன தேவதை:

 

வகைதொகையில்லாது அனைத்து புல், பூண்டு, பசு பறவைகளை அழித்தொழிப்பவனை, 

ஆதி மனிதனாக்கி வீட்டுக் குகைக்குள் அடைத்த நீ, வில்லன் வைரஸ் அல்ல;

 

மரத்துப் போன மானுடனுக்கு சுய உணர்வு அளிக்க

விஸ்வரூபம் எடுத்த இயற்கை தேவதை!


====================== 


                -ஜேயெஸ்

Comments